Sunday, June 30, 2024
Home » நாடாளுமன்றத்தில் பாஜ கொண்டுவரும் தீர்மானத்துக்கு ஆதரவு, 14 சீட்டும் வேண்டும்: டெல்லியில் நடந்த ஆலோசனையில் எடப்பாடியிடம் அமித்ஷா கோரிக்கை

நாடாளுமன்றத்தில் பாஜ கொண்டுவரும் தீர்மானத்துக்கு ஆதரவு, 14 சீட்டும் வேண்டும்: டெல்லியில் நடந்த ஆலோசனையில் எடப்பாடியிடம் அமித்ஷா கோரிக்கை

by Karthik Yash

சென்னை: டெல்லியில் அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சந்தித்துப் பேசினார். அப்போது நாடாளுமன்றத்தில் பாஜ கொண்டு வரும் அனைத்து தீர்மானங்களையும் ஆதரிக்க வேண்டும், 14 சீட் வேண்டும் என்று அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் ஆளுங்கட்சியான பாஜ தனது பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை இலக்கு வைத்து களப்பணியை தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில் பாஜவை வீழ்த்தும் வகையில் எதிரணியினர் ஓரணியில் திரண்டுள்ளனர். இதற்காக எதிர் அணியினர் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றனர். அண்மையில் நடந்த இடைத்தேர்தலில் எதிரணியினரின் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இது அவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே வேகத்தில் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளையும் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான தேர்தல் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார்.

இதற்காக வியூகங்களை வகுத்து செயல்படுத்த கட்சியினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் செய்த சாதனைகளை மக்களிடத்தில் எடுத்து சென்று விளக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து கூறி பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் பாஜ தலைமையிலான கூட்டணியில் அதிமுக இடம் பெற்றுள்ளது. அவர்கள் பாஜவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை பாஜ வருகிற 18ம் தேதி கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தை தேர்வு செய்யும் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, பிரதமர் நியமிக்கும் அமைச்சரை சேர்ப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர ஒரு நாடு, ஒரு தேர்தல் முறையை கொண்டுவருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளது.
இந்தநிலையில் இந்தியா கூட்டணியை உடைக்கும் நடவடிக்கையை பாஜ தொடங்கியது.

ஆனால் கூட்டணியை அவர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் தென் மாநிலங்களில் பாஜ தேய்பிறையாகவே உள்ளது. இதனால் கட்சியை வளர்க்கவும், கூட்டணி அவசியம் என்பதை உணர்ந்த தலைவர்கள், தென் மாநிலங்களில் கூட்டணி குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக கர்நாடகாவில் குமாரசாமியுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தனித்துப் போட்டியிட்டாலும் பாஜ ஆதரவுநிலையில் உள்ளார்.

இதனால் குமாரசாமி, ஜெகன்மோகன் ரெட்டி, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை டெல்லிக்கு அழைத்து நாடாளுமன்றத்தில் பாஜ கொண்டு வரும் தீர்மானத்தை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக அவர்களை டெல்லிக்கு அழைத்துள்ளது. அதற்காகத்தான், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 10.45 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு 8 மணிக்கு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

சந்திப்பின்போது, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பதால் எம்பிக்கள் அனைவரும் கண்டிப்பாக கூட்டத்தில் ஆஜராக வேண்டும். தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் நீங்களே சொல்லுங்கள். முக்கிய தீர்மானங்கள் வர உள்ளது என்று கூறியுள்ளார். அதன்பின்னர் கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா, நாங்கள் தமிழகத்தில் வளர்ந்துள்ளோம். அதனால் கடந்த முறை 5 சீட்டுகள் மட்டுமே கொடுத்தீர்கள். அப்போது நீங்கள் ஆளும் கட்சியாகவும் இருந்தீர்கள். தற்போது நீங்கள் ஆளும் கட்சி இல்லை. பாஜகவின் அதிகார பலத்தில்தான் போட்டியிட வேண்டும்.

இதனால் கடந்த முறை போட்டியிட்டதைப்போல 3 மடங்கு அதாவது 14 சீட்டுகள் வேண்டும். வாசன், கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோருக்கு தலா ஒரு சீட் கொடுக்க முடிவு செய்துள்ளோம். மீதம் உள்ள 10 சீட்டில் நாங்கள் நிற்க முடிவு செய்துள்ளோம். அதில் ஒரு சீட் கூட குறைக்க முடியாது. நீங்கள் 25 தொகுதிகளில் நின்று கொள்ளுங்கள். புதுவையில் நாங்கள் நிற்கிறோம் என்று கூறியுள்ளார். பின்னர் தொகுதிப் பங்கீட்டை பின்னர் முடிவு செய்யலாம் என்று கூறிய அமித்ஷா, பாஜ கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டார். சுமார் 30 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார்.
அதேநேரத்தில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி ஆகியோர் நாளை அமித்ஷாவை சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

seven + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi