டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில், இதில் கூட்டணி கட்சிகளின் உதவியோடு பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழலில் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.
இதில் இடைக்கால சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி. பார்த்ருஹரி மஹ்தாப்க்கு குடியரசுத்தலைவர் 10 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இடைக்கால சபாநாயகராக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இவ்விழாவை புறக்கணித்தனர். அதனைத் தொடர்ந்து 11 மணி அளவில் தற்காலிக சபாநாயகர், எம்.பி.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சார்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர். அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் அரசியல் சட்டத்துக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுவதாக இந்தியா கூட்டணி குற்றச்சாட்டியுள்ளது.