சென்னை: பார்கின்சன்ஸ் நோயால் அவதிப்பட்டு வந்த 53 வயதான நோயாளிக்கு ஆழமான மூளை தூண்டுதல் அறுவை சிகிச்சையை காவேரி மருத்துவமனை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளது. 53 வயதான நபர் ஒருவர் பரிசோதனைக்காக வடபழநியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதனை செய்ததில் பார்கின்சன்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நடுமூளையின் கீழ்ப்பகுதியில் ஆழமான மூளை தூண்டல் மருத்துவ செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. மைக்ரோ எலக்ட்ரோடு ரெக்கார்டிங் (MER) வழிகாட்டலின் கீழ் செய்யப்பட்ட இச்செயல்முறையில் மிக நவீன திசையுறு டிபிஎஸ் (DBS) எலக்ட்ரோடுகள் மூளையில் வெற்றிகரமாக பதியம் செய்யப்பட்டன. காவேரி மருத்துவமனையில் டிபிஎஸ் (DBS) நிபுணர் விகாஸ் அகர்வால் தலைமையில் வெவ்வேறு துறைகளை சேர்ந்த 10 மருத்துவ நிபுணர்கள் இந்த அறுவையை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக, காவேரி மருத்துவமனை மருத்துவர் விகாஸ் அகர்வால் கூறியதாவது: இந்த மருத்துவ செயல்முறையின் வெற்றிக்கு முக்கிய அம்சம் மூளை நரம்பியல் மருத்துவர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு குழு அணுகுமுறையாக இருக்கிறது. தொழில்நுட்ப துல்லியம் இந்த அறுவை சிகிச்சைக்கு முக்கியமானது என்றாலும் அதுமட்டும் போதாது; சாத்தியமுள்ள அதிகபட்ச அளவிற்கு வாழ்க்கையின் தரம் மீண்டும் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு பல்வேறு துறை நிபுணர்களின் ஒத்துழைப்பான முயற்சியும் அவசியம். இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை, மருத்துவமனையின் திறன்மிக்க மருத்துவ குழுவின் அர்ப்பணிப்பிற்கும், அனுபவத்திற்கும் மற்றும் முழு நம்பிக்கை வைத்திருந்த நோயாளியின் மன வலிமைக்கும் ஒரு நல்ல சான்றாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.