படாளத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத வாகன நிறுத்த யார்டுகள்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

மதுராந்தகம்: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை படாளம் பகுதியில் வாகன ஓட்டிகள், உதவியாளர்கள் தங்கி ஓய்வெடுத்து, தங்கிச் செல்லும் வாகன யார்டில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனை, நிறைவேற்றி தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் லாரி டிரைவர்கள், கிளீனர்கள் மற்றும் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் ஓய்வெடுத்து செல்ல யார்டு என அழைக்கப்படும் 2 வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உள்ளன.

இந்த யார்டில் வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் தங்கி உணவு சமைத்து சாப்பிடுவது, ஓய்வெடுப்பது என ஓரிரு நாட்கள் இருந்து விட்டு மீண்டும் தங்களின் பயணத்தை தொடர்வது வழக்கம். இங்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நின்று செல்கின்றன. இவர்களின் வசதிக்காக இப்பகுதியில் கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவையெல்லாம், தொடக்கத்தில் கொஞ்ச நாட்கள் முறையாக செயல்பட்டது. அதன் பிறகு அவை வழக்கம்போல பராமரிப்பு இல்லாத காரணத்தினால் தற்போது பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறிவிட்டது.

இதனால், இங்கு வரும் டிரைவர்கள், கிளீனர்கள் இப்பகுதியில் திறந்தவெளியில் மலம் கழிப்பது உள்ளிட்ட சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் செயல்களை செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி ஏராளமானோர் வந்து செல்லும் இந்த இடமானது மிகவும் அசுத்தமாகவும் குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது. இதனால், இங்கு வரும் டிரைவர்கள், கிளீனர்கள் மட்டுமின்றி இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இரண்டு வாகன நிறுத்தங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பல வீடுகள், கடைகள் அமைந்துள்ளன.

இங்கு இருக்கும் மக்களுக்கு இதன் மூலம் சுகாதாரம் சீர்கேடு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, இங்கு நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி இங்கு ஓய்வெடுத்துச் செல்பவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கழிவறைகள், அதற்கு உண்டான தண்ணீர் வசதி, குடிநீர் வசதி போன்றவற்றையும் முறையாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்