Friday, September 27, 2024
Home » பாரிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் 5 புதிய மருத்துவ கட்டிடங்கள்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

பாரிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் 5 புதிய மருத்துவ கட்டிடங்கள்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

by Karthik Yash

பூந்தமல்லி: பூந்தமல்லி வட்டத்திற்குட்பட்ட பாரிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.2.57 கோடி மதிப்பீட்டில் 5 புதிய மருத்துவ கட்டிடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். பூந்தமல்லி வட்டத்திற்குட்பட்ட பாரிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.2.57 கோடி செலவில் 5 புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். எம்எல்ஏகள் ஆவடி சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி, ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் டி.தேசிங்கு, ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், பாரிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுகாதார அலுவலர்கள் பூந்தமல்லி பிரபாகரன், திருவள்ளூர் பிரியாராஜ் ஆகியோர் வரவேற்றனர். இந்த விழாவில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு 5 புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில், பூந்தமல்லி பாரிவாக்கத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் பெருமாள்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் ஆவடி வட்டம், திருநின்றவூர் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திருத்தணி வட்டம், அகூர் துணை சுகாதார நிலைய கட்டிடம், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஆவடி வட்டம், தாசர்புரம் துணை சுகாதார நிலைய கட்டிடம் என மொத்தம் ரூ.2.57 கோடி செலவில் 5 புதிய மருத்துவ கட்டிடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பதில் பெருமையாக கருதுகிறேன். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.63.75 கோடி செலவில் 30 மருத்துவ கட்டிடங்கள் மற்றும் பல்வேறு திட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு திருவள்ளூர் மாவட்டத்தில், ரூ.236.63 கோடி செலவில், 17 நகர்புற நல வாழ்வு மையங்கள், 14 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், 7 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டிடம், செவிலியர் குடியிருப்பு, வட்டார பொது சுகாதார அலகு, அல்ட்ரா சவுண்ட்ஸ் கேன் கருவி, பூந்தமல்லி துணை செவிலியர் பயிற்சி பள்ளி மற்றும் மாணவியர் விடுதி கட்டிடம், 3 அரசு மருத்துவமனையில் திருவொற்றியூர், திருத்தணி, ஆவடி கண் அறுவை அரங்கம், ரத்த வங்கி கட்டிடம், கூடுதல் கட்டிடம் மற்றும் சி.டி.ஸ் கேன் கருவி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், புதிய மருத்துவமனை கட்டிடம், அறுவை சிகிச்சை அரங்கம், மகப்பேறு உயர் சார்பு தீவிர சிகிச்சை பிரிவு, 10கிலோ லிட்டர் ஹலோ ஆக்ஸிஜன் சேமிப்பு கலன் ஆகிய பல்வேறு வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு பேசினார்.

பின்னர், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சமுதாய குடும்ப தத்தெடுப்பு திட்டத்தை மேம்படுத்தும் வகையில் பெரு நிறுவன சுற்றுச்சூழல் சமூக பொறுப்பு நிதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து, மருத்துவக் கல்லூரிக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை உபகரணங்கள் போன்றவை வழங்கப்பட்டது. மேலும் 9 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், 3 பயனாளிகளுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் விலையில்லா கண் கண்ணாடிகளையும் அமைச்சர்கள் ஆர்.காந்தி, மா.சுப்ரமணியன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து ஒன்றிய அரசின் மூலம் வழங்கப்படும் தேசிய தரச் சான்றிதழ் இந்த வருடம் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

அவ்விருதினை அமைச்சர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதியிடம் வழங்கினர். இதில் ஒன்றியச் செயலாளர் கமலேஷ், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மீரா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ், ஆவடி மாநகராட்சி நல அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் (பொன்னேரி) லிவிங்ஸ்டன், வட்டாட்சியர் கோவிந்தராஜ், துணை இயக்குனர்கள் சேகர் (குடும்ப நலம்), சங்கீதா (காசநோய்), வசந்தி (தொழுநோய்), வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் மற்றும் மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

three − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi