பாரீஸ்: பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் படகுப் போட்டிக்கு தமிழரான ராணுவ வீரர் விஷ்ணு சரவணன் தகுதி பெற்றுள்ளார். ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டியில் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்றவர். மும்பையில் ராணுவ அதிகாரியாக பணிபுரியும் விஷ்ணுவின் தந்தை சரவணன், தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 24 வயதாகும் விஷ்ணு சரவணன், ராணுவத்தில் சுபேதராக பணிபுரிந்து வருகிறார்.
ஐ.எல்.சி.ஏ.-7 உலக சாம்பியன் படகுப் போட்டியில் பங்கேற்ற விஷ்ணு சரவணன், 26-வது இடத்தை பிடித்ததன் மூலம் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்ற விஷ்ணு சரவணன், தொடர்ந்து 2-வது முறையாக ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ளார். அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் படகுப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விஷ்ணு சரவணன் படைத்துள்ளார்.