பரமத்தி வேலூர்: பரமத்திவேலூர் அருகே, மாணவிகளை ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்ததாக ஆசிரியர் மீது குற்றம்சாட்டி, அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே கீரம்பூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் பன்னீர்செல்வம் என்பவர், மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகளை அவர் ஆபாசமாக செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள், தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று பள்ளி முன் திரண்டனர்.
அந்த ஆசிரியரிடமிருந்து செல்போனை வாங்கி பார்த்த போது, அதில் ஏராளமான ஆபாச படங்கள் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். மேலும் நிறைய படங்கள் அழிக்கப்பட்டிருந்ததையும் கண்டனர். அதனை ரெக்கவரி மூலம் எடுத்து பார்த்தபோது மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே, பள்ளியின் தலைமையாசிரியர் சர்மிளா, புகாரில் சிக்கிய ஆசிரியரை அறையில் வைத்து பூட்டி விட்டு, பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையறிந்த பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசாரிடமும் வாக்குவாதம் செய்தனர். அப்போது, போலீசார் ஆசிரியர் இருந்த அறையை திறக்க முயன்றனர். அவர்களை திறக்கவிடாமல் முற்றுகையிட்டனர். தொடர்ந்து ஏடிஎஸ்பி மணிமாறன், டிஎஸ்பி கலையரசன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து, பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவிகளிடம், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஷ்குமார் நேரில் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, அந்த ஆசிரியரை விசாரணைக்காக போலீசார் வாகனத்தில் ஏற்றினர். அப்போது, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், கலெக்டர், கல்வித்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனே வரவேண்டும் என வலியுறுத்தி, போலீஸ் வாகனத்தை செல்ல விடாமல் பெற்றோர் தடுத்தனர். இதனால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டதால் அனைவரும் கலைந்து சென்றனர்.
- போதையில் சில்மிஷம் ஆசிரியர் `சஸ்பெண்ட்’
சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டாரத்திற்குட்பட்ட முளுவி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மலைக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக ஹரிஹரன் பணிபுரிந்துள்ளார். அவர் போதையில் பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று தலைமை ஆசிரியரிடமும், மாணவ, மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர். இதில், ஆசிரியர் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சந்தோஷ், பட்டதாரி ஆசிரியர் ஹரிஹரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.