Wednesday, October 2, 2024
Home » உறுப்பினர்களை சேர்க்க முடியாத விரக்தியில் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் தாமரை விஐபிக்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

உறுப்பினர்களை சேர்க்க முடியாத விரக்தியில் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் தாமரை விஐபிக்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by MuthuKumar

‘‘தலைமையிடம் போட்டு கொடுத்தே நம்பிக்கையை அதிகப்படுத்தி வரும் மாஜி அமைச்சருக்கு அவரது வழியிலேயே செக் வைக்க சைலன்டாக இருந்து வரும் மாஜி அமைச்சர் முடிவு பண்ணியிருக்கிறாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘கடலோர மாவட்டத்தை சேர்ந்த இலை கட்சி மாஜி அமைச்சர் மணியானவர் திடீரென சைலன்டாக இருந்து வர்றாராம்.. இந்த திடீர் சைலன்டுக்கு காரணம், கட்சிக்குள்ளே மணியானவர் ஏதாவது பேசினால், அதை திரித்து தலைமைக்கு வேறு மாதிரியாக பலாப்பழக்காரரின் ஆதரவாளராக இருந்து மீண்டும் வந்த மற்ெறாரு மாஜியானவர் தெரிவித்து விடுகிறாராம்..

இப்படி போட்டு கொடுத்தே இந்த மாஜி அமைச்சர் தனது நம்பிக்கையை மேலிடத்தில் அதிகப்படுத்திக் கொண்டாராம்… தலைமையும் அவர் சொல்வதை கேட்பதால், மணியானவர் எதற்கு வம்புன்னு சைலன்டாக இருந்து வருவது கட்சி நிர்வாகிகளுக்கு பின்னர் தான் தெரிய வந்ததாம்… தலைமைக்கு தகவல் சொல்லும் அந்த மாஜியானவருக்கு அவரது வழியிலேயே செக் வைக்க மணியானவர் முடிவு செய்திருக்கிறாராம்.. இந்த டாப்பிக் தான் மாவட்டம் முழுவதும் இலைகட்சிக்குள்ளே இப்படி ஓடிக்கிட்டு இருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேலை ஆசை காட்டி 3 எல் வசூலிச்ச இலைபார்ட்டி ஒருத்தர் மீது காக்கிகள் நிலையத்திற்கு புகார் போனதுபற்றி தெரியுமா?..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டத்துல கோணம் பாதியான நகர் ஆட்சியில இலை பார்ட்டியை சேர்ந்தவரு, அவங்க ஆட்சி இருந்தப்போ, நகர் ஆட்சிக்கு தலைவராக இருந்தாராம்.. அவரு கடந்த 8 வருஷத்துக்கு முன்னாடி, கோணம் பாதியான நகர் ஆட்சியில பில் கலெக்டர் வேலை இருக்குது.. நான் வாங்கி தர்ேறன்னு சொல்லி 6 எல் கேட்டிருக்குறாரு.. அதை நம்பிய ஒருத்தரு, 3 எல் கொடுத்திருக்காரு.. ஆனா, இதுநாள் வரைக்கும் வேலை வாங்கித்தரலையாம்..

வேலை கிடைச்சிடும்னு நம்பி இருந்தவரு ஏமாற்றம் அடைச்சிருக்காரு.. பணத்தையும் திரும்ப கொடுக்கவே இல்லையாம்.. இதனால பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட காக்கி ஆபிசுக்கு புகார் மனுவோட போயிருக்காரு, கோணம் பாதியான காக்கிகள் நிலையத்துக்கு புகார் மனு விசாரணைக்கு போயிருக்குதாம்.. இதை கேள்விப்பட்ட இலை பார்ட்டிகள் எதுக்குப்பா வாங்கிட்டு, இப்படி கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துறாங்கன்னு திட்டி தீர்த்து வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி ஆட்சியின்போது மாணவர் விடுதி செலவினத்தில் 4 சி மோசடி விவகாரத்தில் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்னு பேசிக்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வட மாநில நதி பெயர் கொண்ட மாவட்டத்தில் கடந்த இலைக்கட்சி ஆட்சியின்போது 2017ம் ஆண்டு முதல் ஆதிதிராவிட நலத்துறை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதி செலவினத்தில் நடந்த மோசடி கடந்த ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட இருவரை கைது செய்தாங்க.. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளதாம்.. ₹4 கோடிக்கும் மேல் மோசடி நடந்துள்ள இப்பிரச்னையில் அப்போது இருந்த உயரதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருக்காம்.. ஆனால் அதிகாரிகளை தப்பிக்க வைத்து கீழ்மட்ட அலுவலர்களோடு வழக்கை முடிக்க முயற்சி நடப்பதாக டாக் ஓடிக்கிட்டிருக்கு… இதையறிந்த ஆதிதிராவிட நலக்குழுவினர் சிலர், இந்த விவகாரத்தை முதல்வர் அலுவலகம் வரை கொண்டு சென்றுவிட்டாங்களாம்… இதனால், விடுதி மாணவர்களின் செலவினத்தில் கைவைத்த விவகாரத்தில் தொடர்புடைய இலைக்கட்சி ஆதரவு உயரதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்பதே மாவட்டம் முழுக்க ஒரே பேச்சாக இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலக்கை எட்ட முடியாத விரக்தியில் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்காங்களாமே தாமரை கட்சி விஐபிக்கள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மூன்றாவது முறையாக அரியணையில் அமர்ந்த ஒன்றிய ஆளும் தரப்பு, பதவியை பிடித்த அசுர வேகத்தில் நாடு முழுவதும் கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியது.. அதன்படி ஒவ்வொரு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சேர்க்கையை மாநில தலைமை முடுக்கி விட்டது. இதேபோல் புதுச்சேரியிலும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக துவக்க விழாவை ஒரு ஆடம்பர ஓட்டலில் நடந்தினாங்க..

இதில் கலந்துகொண்டு பேசிய மேலிட தரப்பு மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சுமார் 2 லட்சம் உறுப்பினர் சேர்க்கையை இலக்காக வைத்ததோடு அக்டோபருக்குள் பணியை முடித்து விடுவோம்னு வீரவசனம் பேசினார்களாம்.. இதற்காக சில விஐபிக்களை புதுச்சேரிக்குள் வரவழைத்து தொகுதி வாரியாக முகாம் நடத்தியும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் விரக்தியில் இருக்கிறார்களாம் பெரும்பாலான தொகுதி தலைகள்.. அறக்கட்டளை, நலத்திட்ட உதவிகள் பெயரிலும் உறுப்பினர்கள் சேர்க்கையை எப்படியாவது நடத்தி இலக்கை எட்டி விடலாம் என்று பார்த்தால், அதுவும் வெட்ட வெளிச்சமாகி விட்டதால் சில தொகுதிகளில் நிர்வாகிகள் வெளியே தலைகாட்ட முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி விட்டார்களாம்..

இதுவரையில் 50 ஆயிரம் உறுப்பினர் சேர்க்கைகூட முடிக்கப்படாத நிலையில் 2 லட்சம் இலக்கை எட்ட முடியுமா என்ற கவலையில் இருக்கிறதாம் அந்த கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தரப்பு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

15 − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi