Saturday, September 28, 2024
Home » இயற்கை விவசாயி ‘பத்மஸ்ரீ’ பாப்பம்மாள் 109 வயதில் மரணம்; முதல்வர் இரங்கல்

இயற்கை விவசாயி ‘பத்மஸ்ரீ’ பாப்பம்மாள் 109 வயதில் மரணம்; முதல்வர் இரங்கல்

by Neethimaan


மேட்டுப்பாளையம். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த தேவனாபுரத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி ‘பத்மஸ்ரீ’ பாப்பம்மாள் (எ) ரங்கம்மாள் (109). கடந்த சில மாதங்களாகவே அவர் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு 8.30 மணியளவில் பாப்பம்மாள் பாட்டி தனது வீட்டில் உயிரிழந்தார். 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கையான முறையில் விவசாய செய்து வந்tha பாப்பம்மாளை பாராட்டி ஒன்றிய அரசு 2021ம் ஆண்டு ‘‘பத்மஸ்ரீ’’ விருதினை அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கைகளால் வழங்கி கவுரவித்தது. கடந்த 17ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் பாப்பம்மாள் பாட்டிக்கு பெரியார் விருதினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

பாப்பம்மாள் பாட்டியின் உயிரிழப்பை அறிந்த பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவு: கழக முன்னோடியும், பெரியார் விருது பெற்றவருமான பாப்பம்மாள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து கலங்கினேன். பேரறிஞர் அண்ணா மீதும், கலைஞர் மீதும் பற்றுக் கொண்டு, கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தன்னை இயக்கத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றியவர். 1965ம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடங்கி, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டக்களங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர்.

என் குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். பாப்பம்மாள் இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

13 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi