பண்ருட்டியில் காடுவெட்டி குரு மகனை தடுத்து நிறுத்திய பாமகவினர்; காவல் துறையுடன் வாக்குவாதம்

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வன்னியர் சங்க இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பண்ருட்டி அடுத்த கொள்ளுகாரன் குட்டை என்ற இடத்தில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த வருவதாக இருந்தது. இதற்காக பாமகவினர் அங்கு ஏற்பாடு செய்து அன்புமணி வருகைக்கு காத்திருந்தனர். இந்த நிலையில் அன்புமணி வருவதற்கு முன்பு காடுவெட்டி குருவின் மகனான கனல் அரசன் அந்த நினைவுத் தூணில் அஞ்சலி செலுத்துவதற்கு வருவதை அறிந்த பாமகவினர் கீழகொல்லை என்ற பகுதியில் கனல் அரசன் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

இதனால் கனலரசனுடன் வந்தவர்களுக்கும் பாமகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு பாமகவினரை அனுப்பி வைத்தனர்; அப்பொழுது அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்திய பிறகு தான் கனல் அரசன் அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும் என பாமகவினர் காவல்துறையினரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு கனல் அரசனை தடுத்து நிறுத்திய போலீசார் பாமகவினர் காவல்துறை அனுமதியுடன் இந்த நிகழ்ச்சியை நடத்துவதாகவும் நீங்கள் அனுமதி பெறவில்லை என்று கூறினர். இதனால் காவல்துறைக்கும் கனல் அரசன் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்பொழுது காவல்துறையினர் அன்புமணி ராமதாஸ் வருகை ஏற்கனவே முன் அனுமதி பெற்று நடைபெறுவதால் அவர்களுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கனல் அரசன் அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக கீழ கொல்லை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: அமைச்சர் சாமிநாதன்

வீடுகள் எரிப்பு விவகாரம்; பீகாரில் பட்டியலினத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தி கடும் கண்டனம்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 28% கூடுதலாக பெய்துள்ளது!!