திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இந்தியா கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ அறிமுக கூட்டம் நேற்று நடந்தது. இதில் வேட்பாளர் துரை வைகோ பேசும்போது கூறியதாவது: எங்களுக்கு தொகுதியே ஒதுக்காமல் இருந்திருந்தாலும் இந்த அணியில் தான் இருந்திருப்போம். நான் அரசியல் குடும்பத்தில் பிறந்திருக்கலாம். ஆனால் நான் அரசியல்வாதியல்ல. கனவில் கூட நான் அரசியலுக்கு வருவேன் என்று எண்ணி பார்க்கவில்லை. வலுக்கட்டாயமாக எங்களது கட்சிக்காரர்கள் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
என் அப்பாவுக்கு முதுமை வந்து விட்டது. எனது அப்பா ஒரு சகாப்தம். அவருக்கு தலைகுனிவு வந்து விடக்கூடாது என்பதற்காக நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனது அப்பாவுக்காக, எங்களது கட்சிக்காக ஏறத்தாழ 30 ஆண்டுகளாக மதிமுகவை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்துள்ளனர். செத்தாலும் எங்கள் சின்னத்தில் தான் நான் போட்டியிடுவேன். இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.