தாம்பரம்: ஒவ்வொரு ஆண்டும் மழைகாலத்தின்போது சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் சூழ்ந்து நிற்பதால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டும் மழைகாலத்தின்போது பாதிப்பு ஏற்பட்டு விமான சேவை பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீர் வடிகால்வாய்களை சரிசெய்ய சென்னை விமான நிலைய இயக்குனர் சி.வி.தீபக் தலைமையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மழைநீர் கால்வாய்களில் உள்ள மண் போன்ற கழிவுகளை அகற்றி சுத்தம் செய்து, மழை காலத்தின்போது மழைநீர் தேங்கி நிற்காத வண்ணம் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்கவேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, விமான நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.