காரைக்குடி: காரைக்குடி அருகே, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென பிரேக் பழுதாகி நின்றது. இதனால், பயணிகள் தவித்தனர். பின்னர் பழுது சீரமைக்கப்பட்டு, ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 5.35 மணியளவில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. 18 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். பள்ளத்தூர் அருகே, செட்டிநாடு பகுதியில் ரயில் சென்றபோது, கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியில் திடீரென பிரேக் பழுதானது. சிறிது நேரத்தில், அந்த பெட்டியில் இருந்து குபுகுபுவென புகை வெளியேறியது. இதனால், அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.
இதையடுத்து பாதுகாப்பு கருதி உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகள் ரயில் எதற்காக நிற்கிறது என்ற காரணம் தெரியாமல் பரிதவித்தனர்.
இதையடுத்து தகவலின் பேரில், காரைக்குடியில் இருந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள், புகை வந்த பெட்டியில் பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டு 6.40 மணியளவில் மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.