சென்னை : டெண்டர் முறைகேடு சிபிஐ விசாரணை தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “எந்த கேள்விகள் எழுப்பப்பட்டாலும் அவ்வப்போது பதில் சொல்லி பழக்கப்பட்ட இயக்கம் திமுக. வரலாறு தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார். தான் ஏதோ உத்தம புத்திரர் போல எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அவர் சம்பந்திக்கும், உறவினர்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் சிபிஐ விசாரணை கேட்கவில்லை. சிபிஐ என்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியும்.
சிறப்பு புலனாய்வு விசாரணைதான் கோரினோம். டெண்டர் முறைகேடு புகாரில் சிறப்பு புலனாய்வு விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்த்தேன். நீதிமன்றம் நிரபராதி என்று விடுவித்து விட்டதைப்போல பழனிசாமி பேசி வருகிறார்.பழனிசாமி மீதான டெண்டர் வழக்கில் பல சிக்கல் இருந்ததால் நீதிமன்றம்தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதிமுக ஆட்சியில் கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்ட வழக்கில் இதுவரை சிபிஐ எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யவில்லை.விஷச் சாராய வழக்கை சிபிஐ விசாரித்தால் தாமதமாகும் என்பதால்தான் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வழக்கறிஞரின் ஆலோசனையை பெற்று எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.