பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோயில் ஊழியர்கள், பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் இப்பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் பழநியாண்டவர் மகளிர் கல்லூரி தற்காலிக பேராசிரியை மைதிலி (40) அடிக்கடி எழுந்து சென்று வந்தார். சந்தேகமடைந்த அலுவலர்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்தனர். இதில் அவர் பணத்தை எடுத்துச் சென்று பைக்குள் வைத்து விட்டு வருவது தெரிந்தது. கோயில் நிர்வாகம் புகாரின்படி அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் ரூ.80 ஆயிரம் எடுத்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் மைதிலியை கைது செய்தனர்.