இம்மாநாடு தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் வகையில் அறநிலைத்துறை அமைச்சர் தலைமையில் ஆன்மிக பெரியோர்கள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் உள்ளிட்ட 20 உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவும், அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் 11 செயற்பாட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்கள்/ஆய்வு மாணவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் இம்மாநாடு தொடர்பாக 15 ஆய்வுக் கூட்டங்களும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் பழனியில் மாநாட்டு பணிகளை 4 முறை களஆய்வும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2 முறை அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.
இம்மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.