கொழும்பு: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், இலங்கையின் மகிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 47.1 ஓவரில் 201 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆப்கான் அணி ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானை முதல் முறையாக ஆல் அவுட்டாக்கியது குறிப்பிடத்தக்கது. இமாம் உல் ஹக் அதிகபட்சமாக 61 ரன் (94 பந்து, 2 பவுண்டரி), ஷதாப் கான் 39, இப்திகார் அகமது 30, முகமது ரிஸ்வான் 21, நசீம் ஷா 18* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் முஜீப் உர் ரகுமான் 3, ரஷித் கான், முகமது நபி தலா 2, பஸல்லாக் பரூக்கி, ரகமத் ஷா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 50 ஓவரில் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 19.2 ஓவரில் வெறும் 59 ரன்னுக்கு சுருண்டது. குர்பாஸ் 18 ரன், அஸ்மதுல்லா உமர்ஸாய் 16 ரன் (காயத்தால் வெளியேறினார்) எடுக்க, சக வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர் (4 பேர் டக் அவுட்). பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ராவுப் 6.2 ஓவரில் 2 மெய்டன் உள்பட 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். 142 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.