பாக். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்: இம்ரான் கான் கட்சி வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதால் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இம்ரான் கானின் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடந்த பொதுதேர்தலில் தோஷகான ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இம்ரான் கான் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் சுயேட்சைகளாக போட்டியிட்டனர்.

தேர்தல் முடிவில் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த சுயேட்சை உறுப்பினர்கள் 101 இடங்களில் வெற்றி பெற்றனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களிலும், வௌியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் பிலாவல் புட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தமுள்ள 336 இடங்களில் 133 இடங்களில் வெற்றி பெற வேண்டிய சூழலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை வெற்றி கிட்டவில்லை. இழுபறி நீடித்த நிலையில் குறைவான இடங்களை வென்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி ஆட்சியமைக்க பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃபின் பெயர் பாகிஸ்தான் பிரதமராக பரிந்துரைக்கப்பட்டது. அவரை எதிர்த்து இம்ரான் கானின் தெஹ்ரிக் இ-இன்சாப் கட்சி சார்பில் ஒமர் அயூப் கான் களமிறக்கப்பட்டார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மார்ச் 3ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 336 உறுப்பினர்களில் 201 பேர் ஷெபாஸ் ஷெரீஃபுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இம்ரான் கான் கட்சி வேட்பாளர் 92 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதையடுத்து பாகிஸ்தான் பிரதமராக கடந்த மே 4ம் தேதி ஷெபாஸ் ஷெரீஃப் பதவி ஏற்றார். நாடாளுமன்ற தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக தெஹ்ரிக்-இ-இன்சாப் குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜா பதவி விலக வலியுறுத்தி தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியினர் நேற்று நா்டாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை பேரணியாக சென்று சிக்கந்தர் ராஜா பதவி விலக வலியுறுத்தியும், இம்ரான் கானை விடுவிக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் உமர் அயூப் கூறியதாவது, “நாடாளுமன்ற தேர்தலை சுதந்திரமாக, நியாயமாக, வௌிப்படையாக நடத்த தேர்தல் ஆணையம் தவறி விட்டது. இதற்கு பொறுப்பேற்று தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தினார்.

Related posts

வலங்கைமான் அருகே இன்று விபத்து பைக் மீது வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி

காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 27 வாகனங்கள் உதிரி பாகங்கள் ஏலம்

தமிழ்நாடு ஊரகத் தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்