திருப்பரங்குன்றம்: மதுரை அருகே, பெயின்ட் கடை உரிமையாளர் வீட்டில் 72 பவுன் நகை மற்றும் 1.5 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை அருகே துவரிமான் கிராமம் உள்ளது. இங்குள்ள வெங்கடாஜலபதி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்கண்ணன் (54). இவர், மதுரை கே.கே.நகரில் பெயின்ட் கடை நடத்தி வருகிறார். இதனால், கே.கே.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து, கடந்த 6 மாதமாக அங்கு குடும்பத்துடன் தங்கி வருகிறார். துவரிமானில் உள்ள வீட்டை அவ்வப்போது சென்று பார்த்து வந்துள்ளார்.
இந்த வீட்டை சுத்தம் செய்து பராமரிக்க வேலைக்காரப் பெண் ஒருவரை நியமித்துள்ளார். இந்நிலையில், வீட்டை சுத்தம் செய்ய சென்ற வேலைக்காரப் பெண், வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து வீட்டின் உரிமையாளர் ரமேஷ்கண்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் சென்று பார்த்தபோது, வீட்டு பீரோவில் வைத்திருந்த 72 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.