திருவெறும்பூர், ஜூலை 25: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி -தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பை தெரிவிப்பதோடு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் தனியார் கல்லூரி முன்பு திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலைகள் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சூர்யா தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் காட்டூரில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களிடம் திருவெறும்பூர் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்த போக செய்தனர். இதனால் சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மதியம் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட தலைவர் மார்க்சியா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டு மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோஷமிட்டனர்