பெரம்பூர்: சென்னை எம்கேபி.நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போதைக்கு பயன்படுத்துவதற்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்வதாக எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதிக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், சர்மா நகர் எஸ்டேட் அருகே போலீசார் சோதனை நடத்தி ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியபோது 28 வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்தார்.
இதன்பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், வியாசர்பாடி எஸ்.ஏ. காலனி 2வது தெருவை சேர்ந்த கணேஷ் (31) என்பதும் வில்லிவாக்கம் ரயில்வே கேட் அருகே குறிப்பிட்ட செல்போன் நம்பரை வைத்து ஒருவரை தொடர்பு கொண்டால் அந்த நபர் மாத்திரைகளை கொண்டுவந்து கொடுத்துள்ளார் என்று தெரிந்தது. இதையடுத்து கணேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவருக்கு வலி நிவாரணி மாத்திரைகள் சப்ளை செய்தவர் யார் என்று விசாரிக்கின்றனர்.