Thursday, September 19, 2024
Home » பாரம்பரிய நெல்… இயற்கை முறை சாகுபடி!

பாரம்பரிய நெல்… இயற்கை முறை சாகுபடி!

by Porselvi

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளால் தற்போது இளம் தலைமுறை அதிகமாக அவதி அடைந்து வருகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற பிரச்னைகள் வயோதிகத்தில்தான் வரும். அதுவும் மிக சொற்பமானவர்களுக்கே வரும். இப்போது பாரபட்சமின்றி அனைவரையும் தழுவி விடுகின்றன இந்த நோய்கள். இதற்கெல்லாம் மாறி வரும் உணவு முறை, உடற்பயிற்சி இன்மை, வேலைப்பளு போன்ற பிரச்னைகளை காரணமாக அடுக்குகிறார்கள். ஆனால் இதில் மாறி வரும் உணவுக்கலாச்சாரம் என்பது மறுக்க முடியாத உண்மைதான். நம் முன்னோர் அவர்களது காலத்தில் சிறுதானியங்களை அதிகளவில் தங்கள் உணவில் சேர்த்துப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். நெல் பயிர் என்றால் கூட அவை பாரம்பரிய ரகங்களாகத்தான் இருக்கும். அதுவும் முற்றிலும் இயற்கை வழியில் விளைவித்துப் பயன்படுத்துவார்கள். அந்த வழக்கம் மெல்ல மெல்ல மாறிப்போனதே மேற்சொன்னவற்றுக்கு அடிப்படையாகி இருக்கிறது.இதை உணர்ந்த பலர் தற்போது இயற்கை முறை விவசாயத்திற்கும், பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடுவதற்கும் தொடங்கி இருக்கிறார்கள். அதன்படி பல பாரம்பரிய ரக நெல் வகைகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார் வேலூர் மாவட்டம் காங்ேகயநல்லூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கவேல்.

வேளாண் பொறியியல் துறையில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு அதை முறையாக விற்பனை செய்தும் சாதித்து வருகிறார். ஒரு மாலைப்பொழுதில் அவரைச் சந்தித்தோம். வயலில் பயிர்களுக்கு இடுவதற்காக இயற்கை இடுபொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த மாணிக்கவேல் நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார். “ எங்கள் ஊர் முழுக்க விவசாயம் எப்போதும் செழித்திருக்கும். நாங்களும் இங்கு பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகிறோம். சிறு வயதிலேயே விவசாயம் சார்ந்த அனைத்துமே எனக்கு முழுமையாக தெரியும். அந்த ஆர்வத்தில்தான் எனது படிப்பிற்காக வேளாண் துறையை தேர்ந்தெடுத்தேன். படிப்பு முடித்த பிறகு வேளாண் பொறியியல் துறையில்தான் வேலை. வேலூர், ராமநாதபுரம் என தமிழ்நாடு முழுக்க 18 மாவட்டங்களில் வேளாண் அலுவலகங்களில் வேலை பார்த்து ஓய்வு பெற்றிருக்கிறேன். பல ஊர்களில் பல விவசாயிகளை நேரடியாக சந்தித்து அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை எல்லாம் கொடுத்து வந்தேன். பணி ஓய்வு பெற்ற பிறகு நாமும் விவசாயம் செய்யலாம் என நினைத்து இப்போது முழுநேரமாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன்.

விவசாயம் செய்ய வேண்டும் என்றால் அது இயற்கை விவசாயம்தான். அதுவும், பாரம்பரிய ரகங்கள்தான். இயற்கை விவசாயம் செய்தால்தான், மண் வளத்தை மேம்படுத்தவும், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளைப் பாதுகாக்கவும் முடியும். அதனால்தான் அந்த விவசாயத்தையே மற்ற விவசாயிகளுக்கும் பரிந்துரைக்கிறேன். குறைந்த நிலப்பரப்பில் ஒரு பயிர் மட்டும் விதைக்காமல், பல பயிர் சாகுபடி செய்து ஆண்டு முழுவதும் வருவாய் கிடைக்கும் வகையில் பயிர்களைப் பயிரிட்டு லாபம் பார்த்தும் வருகிறேன். விவசாயம் செய்வதற்கென்று எனக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், 90 சென்ட் நிலத்தில் நெல் விவசாயம் செய்து வருகிறேன். மீதமுள்ள நிலத்தில் பல பயிர் சாகுபடி என்னும் முறையில் வாழை, தேக்கு, மரவெண்டை, மர அவரை, மாஞ்செடி உள்ளிட்ட மரங்களை நட்டு அதன் மூலமும் வருவாய் பார்த்து வருகிறேன். எனது நிலத்தில் இதுவரை தூயமல்லி, ஆத்தூர் கிச்சடி, ஆற்காடு கிச்சடி, சேலம் சன்னா, இட்லி அரிசி, தங்கச்சம்பா, பூங்கார் போன்ற பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு அதில் கணிசமான அளவு லாபமும் எடுத்திருக்கிறேன். தற்போது மைசூர் மல்லி நெல் ரகத்தை பயிரிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாரம்பரிய ரகங்களைப் பயிரிட்டு அதை உணவாக எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. வாடிக்கையாளர்களும் இந்த ரக அரிசியைத்தான் விரும்புகிறார்கள். விவசாயத்திற்கு தேர்ந்தெடுத்த நிலத்தை நன்றாக உழுது அதில் தொழுஉரத்தைக் கொட்டி மீண்டும் உழ வேண்டும். அப்போதுதான், அந்த உரம் நன்றாக மண்ணில் கலந்து மண்ணிற்கு நல்ல உயிர் சத்துக் கிடைக்கும்.

அதன்பின், நாற்றங்கால் முறையில் எப்போதும் போல விதைகளை விதைத்து அதற்குத் தேவையான நேரத்திற்கு நீர் கொடுக்க வேண்டும். அதேபோல, களைகளை நீக்குவதற்கு களைக்கொல்லிகளைப் பயன்படுத்தக்கூடாது. கையால்தான் களைகளை நீக்க வேண்டும். அப்போதுதான் மண்ணிலும் பயிரிலும் செயற்கை உரம் கலக்காமல் நல்ல முறையில் இருக்கும். அதன்பின், பயிருக்குத் தேவையான உரங்களுமே இயற்கையானதாக இருக்க வேண்டும். நான் இதுவரை எனது வயலில் இயற்கை உரங்களான வேப்பம் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கு, ஜீவாமிர்தம் கரைசல், மீன் அமிலம், மண்புழு உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது, வேலூர் மாவட்டத்தில் வேப்பம் புண்ணாக்கு கிடைப்பதில்லை. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வேப்பங்கொட்டைகளை வாங்கி வந்து இங்கு பயன்படுத்துகிறேன்.செயற்கை உரங்களை பயன்படுத்தி நெல் பயிரிட்டால் 25 மூட்டைகள் மகசூலாக கிடைக்கிறது. ஆனால் இயற்கை முறையில் விவசாயம் செய்தால் 20 மூட்டைகள் மகசூல் கிடைக்கிறது. செயற்கை உரங்கள் பயன்படுத்துவதைக் காட்டிலும், இயற்கை உரங்களை பயன்படுத்தி பெறும் அரிசிக்கு சந்தையில் மதிப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகள் அதிகம் லாபம் பெறலாம். அதோடு ஒரே பயிரை நம்பி மட்டும் இல்லாமல் பல பயிர் சாகுபடி என்ற முறையில் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கும் வகையில் பயிர்களை சாகுபடி செய்தால் விவசாயிகள் நஷ்டம் அடைவதைக் குறைக்கலாம். அதுமட்டுமல்லாமல், நாம் விளைவித்த அரிசியை நாமே நேரடியாக விற்பனை செய்வதன் மூலமும் நல்ல லாபம் பெறலாம்.

மன்னர்கள் விரும்பிய மைசூர் அரிசி

கர்நாடகா மாநிலத்தின் பாரம்பரிய நெல்லான இந்த ரக அரிசியில், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு உணவளிக்கவே பெரும்பாலான நகரவாசிகள் மைசூர் மல்லி அரிசியை விரும்பி வாங்குகிறார்கள். மன்னர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்ட நெல் ரகமாக இருந்தபோதும், சாதாரண குடிமகனும் இந்த ரகத்தை சாப்பிடும் வகையில் மைசூரைத் தொடர்ந்து தமிழக விவசாயிகளும் இந்த அரிசியை பெருமளவு பயிரிட்டு வருகிறார்கள்.

 

You may also like

Leave a Comment

11 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi