கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகளை எடுத்து வருவதாகவும், ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் விவசாயிகள் நெல்லை கொண்டு வரக்கூடிய நிலை உள்ளதாகவும், விற்பனை கூடத்திற்கு அருகே உள்ள தெருக்களில் நெல் மூட்டைகளை வைத்து, அவற்றை விற்பனை செய்வதற்காக இரண்டு, மூன்று நாட்கள் காத்திருப்பதாகவும், நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்கும் வகையில், இந்த இடத்தில் பாதுகாப்பான கிடங்குகள் கட்டித் தரப்படும் என்று தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் அங்கு பாதுகாப்பான இடம் அமைப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை என்று மேற்படி விற்பனைக் கூடத்தை நம்பியிருக்கும் விவசாயிகள் கூறுகின்றனர். நெல் மூட்டைகளை சேமித்து வைக்க பாதுகாப்பான இடம் இருந்தால்தான் தரமான அரிசி மக்களை சென்றடைய முடியும்.இது மட்டுமல்லாமல், மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அரசு கொள்முதல் செய்து அதற்கான உரிய விலையை அளிக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இங்கு மட்டுமல்ல, பெரும்பாலான இடங்களில் இதுபோன்ற பிரச்சனை நிலவுகிறது. ‘பேனா’ சிலைக்கெல்லாம் கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கும் தி.மு.க. அரசு, உணவு தானியங்களை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கையினை எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையேயும், விவசாயிகளிடையேயும் நிலவுகிறது. எனவே, பொதுமக்களின் தேவையினைப் பூர்த்தி செய்யும் வகையில், நெல் உள்பட உணவு தானியங்களை பாதுகாப்பான முறையில் வைத்திருக்கத் தேவையான கிடங்குகளை உடனடியாகக் கட்டிட முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.