திருவாடானை : திருவாடானை வட்டாரத்தில் அதிகளவில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விதைப்பு பணி துவங்கும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென அதிக அளவில் மழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விதைப்பு பணியை தொடர்ந்து செய்ய முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முன்பெல்லாம் ஆடி பட்டம் வந்தவுடன் நெல் விதைப்பு பணியை தொடங்கி விடுவோம். ஆனால் காலம் மாற்றத்தால் போதிய மழை பெய்யாத காரணத்தால் ஆவணி மாதம் நேரடி நெல் விதைப்பு சில ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பெய்த சிறு சிறு பருவ மழையை வைத்து கோடை உழவு முடித்து வைத்திருந்தோம்.
இந்நிலையில் விதைப்பு பணி துவங்கும் சமயத்தில் திடீரென பெரிய அளவில் மழை பெய்து விட்டது.
இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விதைப்பு பணியை செய்ய முடியவில்லை. தண்ணீர் வற்றி நிலம் காய்ந்த நிலையில், நேரடி நெல் விதைப்பு செய்யப்படும். இதற்கு சுமார் 10 நாட்களுக்கு மேலாகும் என்றனர்.