நீண்ட வாதத்திற்கு பிறகு நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளனர். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர முடியும். எனவே, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அனுபவம் வாய்ந்த கல்வியாளர் அடங்கிய இரு நபர் குழுவை நீதிமன்றம் நியமிக்கிறது. அதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் குழுவின் தலைவராக நியமிக்கப்படுகிறார். காயிதே மில்லத் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் பிரீதா ஞானராணி உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இந்த குழு பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை வாரியத்தில் செயல்பட வேண்டும். இந்த குழு 254 உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பாணைகள், இதற்கு முந்தைய விசாரணை அறிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான கல்வி தகுதி குறித்தும் அவர்கள் எந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர் அல்லது அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க வேண்டும். இந்த குழு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் பணியை தொடங்க வேண்டும். குழுவிடம் வரும் 19ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட உதவி பேராசிரியர்கள் தங்கள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த குழுவில் ஆகஸ்ட் 21 முதல் அகர வரிசை அடிப்படையில் குழு அனுப்பும் தேதியில் ஆஜராக வேண்டும். ஆவணங்களை குழு ஆய்வு செய்து அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் செப்டம்பர் 27ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை செப்டம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது.