பிற கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதும், அவர்களுக்காக சிட்டிங் எம்பிக்கள் தங்கள் இடத்தை தியாகம் செய்ததும், மோசமான செயல்பாட்டிற்கான பல காரணங்களில் ஒன்று. இதில் மிகப்பெரிய உதாரணம் மகாராஷ்டிரா. அங்கு சிவசேனாவுடன் பெரும்பான்மை இருந்தாலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரசை பாஜ தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டது. ஏன் இந்த தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதன் மூலம் பாஜவின் மதிப்பு குறைந்தது. பாஜவும் மற்றொரு அரசியல் கட்சியாக மாறியது.
அங்கீகாரத்திற்காக காத்திருக்காமல் அர்ப்பணிப்புடன் உழைக்கும் பழைய நபர்களை புறக்கணித்ததன் விளைவையும் தேர்தல் முடிவு காட்டி உள்ளது. தேர்தலில் பாஜவுக்காக ஆர்எஸ்எஸ் உழைத்ததா என்று கேட்டால், ஆர்எஸ்எஸ் என்பது பாஜவின் களப்படை அல்ல. உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜவுக்கென தொண்டர்கள் பலர் இருக்கிறார்கள். தேசத்திற்காக தேர்தலில் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுமென விழிப்புணர்வை எப்போதும் போல் இம்முறையும் ஆர்எஸ்எஸ் ஏற்படுத்த பிரசாரம் செய்தது. அதேசமயம் தேர்தல் பணியில் ஈடுபட ஆர்எஸ்எஸ்சின் ஆதரவை பாஜ கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.