திண்டுக்கல், ஏப். 19: திண்டுக்கல் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் திருச்சி ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக கிளை அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் சின்ராஜ் தலைமை வகிக்க, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் செந்தில் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அவுட் சோர்சிங் மூலம் டிரைவர்கள் நியமிப்பதை உடனடியாக கைவிட வேண்டும். குறைந்தபட்சம் கூலிக்கும் குறைவாக சம்பளம் தந்து ஆள் எடுப்பது தவிர்க்க வேண்டும். பல ஆண்டுகளாக வேலைக்கு ஆட்கள் எடுக்காமல் தற்போது அவசர தேவை என்று கூறி அவுட் சோர்சிங் முறையில் ஆள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஐ.ஆர்.டி மூலம் டிரைவர், நடத்துனர் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். துணை பொது செயலாளர் வெங்கிடுசாமி நன்றி கூறினார்.