ஒட்டன்சத்திரத்தில் இருந்து வெரியப்பூர், ஜவ்வாதுபட்டி, மார்க்கம்பட்டி, பள்ளபட்டி, அரவக்குறிச்சி, கரூர் செல்லும் முக்கிய சாலையின் பிரிவில் வைக்கப்பட்டுள்ள ஊரின் பெயர் பலகையை மரக்கிளைகள் சூழ்ந்து இருந்தன. இதனால் அவ்வழியே பயணிப்பவர்கள் வழி தெரியாமல் வேறு வழியில் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக இரவு நேரங்களில் பல கிலோ மீட்டர் வழி தெரியாமல் வேறு வழியில் சென்று வாகனஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதனால் மரக்கிளைகளை இருபுறமும் அப்புறப்படுத்தி ஊரின் பெயர்கள் நன்கு தெரியுமாறு பலகைகளை நிறுவ வேண்டுமென கடந்த செப்.18ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக ஊரின் பெயர் பலகைகளை மறைத்து இருந்த மரக்களைகளை அப்புறப்படுத்தினர். அனைவரது நலன் கருதி செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறையினருக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.