உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

தேனி: சின்னமனூரில் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேலுவிற்கு (37) இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார்! கடந்த 23ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இவர், தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியிருந்தார். இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதுதொடர்பாக முதமைச்சர் பதிவில், உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் நடக்கும் என தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு அறிவித்தனர்.

இதன் மூலம் முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் முதன் முறையாக அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறுவது இவருக்குத்தான். வடிவேலுவின் சொந்த ஊரான சின்னமன்னுரில் இறுதி சடங்கு நடைபெறும் இறுதி சடங்கில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கிறார். இதனிடையே, மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதை செலுத்த செல்கிறோம் என்றும் இன்று முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது எனவும் கூறினார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு