சென்னை: உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அறுவை சிகிச்சைக்குபின் 3 ஆண்டுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என்று மாநில அளவிலான குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேருக்கு, சிறுநீரக தானம் வழங்க முன்வந்தவர்கள் நெருங்கிய உறவினர்கள் அல்ல எனக் கூறி, சிறுநீரக தானத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவுக்கு, மருத்துவமனை விண்ணப்பிக்கவில்லை.
இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் கோரி தானம் பெறுபவர்களும், வழங்குபவர்களும் சேர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், உடல் உறுப்புகள் விற்பதை தடுக்க உடல் உறுப்பு மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டம் இயற்றப்பட்டது. உடல் உறுப்பு தான ஒப்புதல் கோரும் விண்ணப்பத்தை மருத்துவமனைதான் அனுப்ப வேண்டும் என குழு வற்புறுத்தக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, தானம் பெறுபவரும், வழங்குபவரும் இணைந்து மாநில அளவிலான குழுவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உடல் உறுப்பு தான விண்ணப்பத்தை பரிசீலித்து ஒப்புதல் வழங்குவதுடன் குழுவின் பணி முடிவடைந்துவிடவில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதி, அறுவை சிகிச்சைக்குபின் ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க உறுப்பு தானம் வழங்கியவருக்கு மருத்துவ காப்பீடு செய்வதுடன், 3 ஆண்டுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என ஐகோர்ட் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் மறைந்த பிறகும் பலரை வாழ வைக்க முடியும். இதனைதொடர்ந்து கடந்த ஆண்டு செப்.23ம் தேதி உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.