திரும்பி வருகிறேன் என ஓபிஎஸ் தூதுவிட்டார்: நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பேச்சு

ஓமலூர்: ஓபிஎஸ் திரும்பி வந்துவிடுவதாக என்னிடம் தூதுவிட்டார். அதற்கு தலைமை கழக நிர்வாகிகள் ஒத்துக்கொள்ளவில்லை என ஓமலூரில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று மாலை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: இன்னும் 10 நாட்களுக்குள் உறுப்பினர் சேர்க்கையை முடித்து விட வேண்டும். நான் பொதுச்செயலாளரான பிறகு 90 ஆயிரம் பேர் மற்ற கட்சியில் இருந்து நமது கட்சியில் இணைந்துள்ளனர்.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் எம்ஜிஆர் கட்சியை தோற்றுவித்தார்.

ஜெயலலிதா சேவல் சின்னத்தில் போட்டியிடும்போது சேவல் சின்னத்திற்கு எதிராக போட்டியிட்ட நபருக்கு உதவியாக இருந்தவர் ஓபிஎஸ். மூன்று முறை முதல்வர் என்று கூறிக்கொள்கிறார். என்னிடம் கட்சிக்கு வந்து விடுகிறேன் என்று தூது விட்டார். அதற்கு தலைமை கழக நிர்வாகிகள் ஒத்துக்கொள்ளவில்லை. இப்போது அவர் எந்த கோர்ட்டுக்கு சென்றாலும் வெற்றி பெற முடியாது. தேர்தல் ஆணையம் தெளிவான தீர்ப்பை நமக்கு வழங்கியுள்ளது. ஓபிஎஸ் இல்லை,எந்த கொம்பனாலும் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது. அமமுக கூண்டோடு காலியாகி ஒவ்வொருத்தராக நமது கட்சிக்கு வந்து கொண்டுள்ளனர்.இன்னும் 4 பேர் வந்தால் அமமுக வாஸ் அவுட் ஆகிவிடும்.

பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள்தான் என்னை தேர்ந்தெடுத்தார்கள். பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் கூறுகிறார். இவரை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்ததே அந்த பொதுக்குழு உறுப்பினர்கள்தான். இவரை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்தால் அது செல்லும், என்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தால் செல்லாது என்கிறார். இவர் திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு