ஸ்ரீவில்லிபுத்தூர்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இவரை எதிர்த்து 5 ஒபிஎஸ்.கள் போட்டியிட்டனர். வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அதிமுக தரப்பினர் 5 ஒபிஎஸ்சை போட்டியிட செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். 5 ஒபிஎஸ்களின் போஸ்டர்களையும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆங்காங்கே கிழித்து எறிந்த சம்பவங்களும் நடைபெற்றன.
பல்வேறு குழப்பங்களுடன் ராமநாதபுரம் தொகுதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது குலதெய்வமான விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். தனது தேர்தல் சின்னமான பலாப்பழத்தை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார். தேர்தல் முடிவு தனக்கு சாதகமாக வெளிவர வேண்டும் என ஓபிஎஸ் வழிபாடு நடத்தியதாக கூறப்படுகிறது.