சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: ஏப்ரல் மாதம் முதல் 6% வரை சொத்து வரியை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் சொத்து வரியை உயர்த்துவதற்காக நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஏழை எளிய மக்கள்தான் பாதிக்கப்படுவர்.
வீட்டு உரிமையாளர்கள் மீது வரி விதிக்கப்படுகிறது என்றாலும், பாதிக்கப்படுபவர்கள் ஏழையெளிய மக்கள்தான் என்பதை நன்கு அறிந்தும், வீட்டு வரியினை அரசு உயர்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்திக் கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் கோரியுள்ள அனுமதியை அரசு நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.