சென்னை: அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வதுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 6ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும், அதனை அவசர அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று கடந்த புதன்கிழமை ஓ.பி.எஸ். சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜலட்சுமி பிரகாஷ் முறையிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். ஆனால், மனு நேற்று பட்டியலிடப்படாத நிலையில் ஓ.பி.எஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, மனு தாக்கல் நடைமுறைகள் முடிந்த நிலையிலும் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்றும் வழக்கை இன்றே விசாரிக்க வேண்டுமென்றும் கோரினார். முறையீடு செய்யப்பட்ட அன்றே மனு தாக்கல் செய்யாத நிலையில் எப்படி விசாரணைக்கு எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வரும் புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.