சென்னை: ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பு முறையீட்டை ஏற்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு வழக்கை விசாரித்தது. அவசரமாக முறையீடு செய்தது ஏன் என ஓபிஎஸ் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பினர்.
பழனிசாமி தரப்பு மீது குற்றச்சாட்டு:
பழனிசாமி தரப்பினர் எண்ணங்களுக்கு ஒத்துவராத உறுப்பினர்களுக்கு கார்டு புதுப்பிக்க மாட்டார்கள் என்று ஈபிஎஸ் தரப்பு மீது ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. எதுவும் நடக்காது, 6 மாதங்களில் உறுப்பினர் சேர்க்கை முடிந்து விடாது என பழனிசாமி தரப்பு வாதிட்டது.
இடைக்கால கோரிக்கை விசாரிக்கப்பட மாட்டாது-ஐகோர்ட்
அதிமுக வழக்கில் இடைக்கால கோரிக்கை விசாரிக்கப்பட மாட்டாது என்பது உயர்நீதிமன்றத்தின் முடிவு என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதிமுக உறுப்பினர் நீக்கம் தீர்ப்புக்கு உட்பட்டது:
அதிமுக உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
4 பொதுக்குழு உறுப்பினரே ஒ.பி.எஸ். பக்கம் உள்ளனர்:
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே ஒ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர் என்று பழனிசாமி தரப்பு கூறியுள்ளது. கட்சி நடவடிக்கைகளை நீதிமன்ற வழக்குகள் மூலம் இழுத்தடிக்கின்றனர் என்றும் பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.
கட்சி செயல்பட இடையூறு செய்யவில்லை-ஓ.பி.எஸ். தரப்பு
கட்சி தினந்தோறும் கூட்டங்களை கூட்டும் என பழனிசாமி தரப்பு வாதிட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் முடிந்துவிட்டது, பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தது. பொதுச்செயலாளர் பதவிக்கும் கட்சி செயல்படவும் எந்த இடையூறும் செய்யவில்லை என்று ஓ.பி.எஸ். தரப்பு கூறியது. கர்நாடக தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு ஏப்.20 கடைசி நாள் என்பதால்தான் செயற்குழு கூட்டப்பட்டது என பழனிசாமி தரப்பு தெரிவித்தது.
அதிமுக வழக்கு ஏப்.20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு:
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஏப்.20-ம் தேதிக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர். ஏப்ரல் 20, 21ல் இறுதி விசாரணை நடைபெறும்; தேவையெனில் 24ஆம் தேதியும் விசாரிப்பதாக இரு நீதிபதிகள் அமர்வு உறுதி அளித்துள்ளது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஒபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஓபிஎஸ்சின் அவசர முறையீட்டை ஏற்று வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு இன்று விசாரித்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துங்கள் என்று கோர்ட் கூறியது.