டெல்லி: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை, ஒன்றிய பாஜக அரசு தவறாக வழிநடத்துகிறது என்று தயாநிதி மாறன் எம்.பி. தெரிவித்துள்ளார். டெல்லி அரசில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான நிர்வாக மசோதாவுக்கு மக்களவையில் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரிகள் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்க மசோதா மீது மக்களவையில் விவாதம் நடத்தப்பட்டது. டெல்லி அரசின் அதிகாரிகள் நியமன மசோதா உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் அவைக்கு வந்து பேச வேண்டும். டெல்லி சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம்தான் பொறுப்பேற்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை, ஒன்றிய பாஜக அரசு தவறாக வழிநடத்துகிறது என்றார். கடந்த 25 ஆண்டுகளாக டெல்லியை பாஜகவால் ஆள முடியவில்லை. டெல்லியை ஆள முடியாததால், பாஜக விரக்தி அடைந்துள்ளது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் அச்சுறுத்தல் நடக்கிறது என்று தயாநிதி மாறன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், எங்கள் கூட்டணியை பற்றி நீங்கள் பேச வேண்டாம், இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாமல் ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளது என்றார். மேலும் 2024ல் நாங்கள் ஆளும் கட்சி வரிசையில் இருப்போம் என்றும் உறுதிபட தெரிவித்தார். மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதிமாறனை பேசவிடாமல் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.