அவனியாபுரம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், மத்தியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி மதுரை விமானநிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மணிப்பூரில் மனித உரிமை மீறல்கள் நிறைய நடக்கின்றன. அந்த மாநிலத்தில் மேடைன் என்னும் இந்து சமுதாய மக்கள் 50 சதவீதம் பேர் உள்ளனர். மற்ற சமூகத்தினரை குறி வைத்து பர்மாவில் உள்ள சீன ஆதரவாளர்களுடன் இந்த கலவரம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
ஆனால், மணிப்பூர் சென்று பொதுமக்களை பார்க்கவில்லை. பிரதமர் உடனடியாக மணிப்பூர் கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், மத்தியில் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி நல்லது செய்தார் என, அவருக்கு ஜால்ரா போடுபவர்கள்தான் கூறுகின்றனர். தொண்டர்கள் சொல்லவில்லை. மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்காதது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.