இதனிடையே கொல்கத்தாவில் இளைஞர் அணி மாநாட்டில் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அடுத்த ஆண்டு மே மாதம் தான் மக்களவை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு டிசம்பர், அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே மக்களவை தேர்தலை நடத்த பாஜ திட்டமிட்டு வருவதாக தெரிவித்திருந்தார். மம்தாவின் பேச்சை ஆதரிக்கும் வகையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். நாளந்தா திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் புதிய வளாகத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார் கூறியதாவது: எனக்கு பதவி மீது ஆசையோ, அரசியலில் லட்சியங்களோ எதுவும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்தும் என நான் 7,8 மாதங்களாகவே கூறி வருகிறேன். இப்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு பாஜ மிகவும் அச்சமடைந்துள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலை மே மாதம் நடத்தினால் அதிக நஷ்டம் ஏற்படும் என்பதால் இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2024 ஜனவரியில் தேர்தலை நடத்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.