திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்கும் 6 மாணவிகள் கல்லூரி முதல்வர் லினட் ஜெ. மோரிசுக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பது: முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த தங்களுக்கு மத சட்டத்தின்படி எல்லா இடங்களிலும் தலை மற்றும் கைகளை மறைக்கும் உடையை அணிய வேண்டும். ஆனால் ஆபரேஷன் தியேட்டரில் ஹிஜாப் அணிய அனுமதிப்பதில்லை. ஆபரேஷன் தியேட்டரில் அணிய வேண்டிய உடையுடன் சேர்த்து ஹிஜாபையும் அணிவது மிகவும் சிரமமாகும். எனவே எங்களுக்கு தலையையும், கைகளையும் மறைக்கும் விதத்தில் ஆடையை அணிய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் லினட் ஜெ. மோரிஸ் கூறியது: ஆபரேஷன் தியேட்டரில் ஹிஜாப் மற்றும் கைகளை மறைக்கும் உடையை அணிய அனுமதிக்க வேண்டும் என்று சில மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுவாக ஆபரேஷன் தியேட்டரில் அணியும் உடை குறித்து சர்வதேச அளவில் ஒரு வரைமுறை உள்ளது. அதன்படி தான் அனைத்து மருத்துவமனைகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. கைகளை மறைக்கும் உடையை அணிந்தால் சிரமம் ஏற்படும். இதை அந்த மாணவிகளுக்கு தெளிவுபடுத்தி உள்ளேன் இவ்வாறு கூறினார்.