இதனால் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் தலைக்குந்தா முதல் ஷூட்டிங் மட்டம் வரை 4 இடங்களில் மரங்கள் விழுந்தன. கலெக்டர் பங்களாவிற்கு செல்லும் வழித்தடத்தில் 2 மரங்களும், தமிழகம் சாலையில் 3 மரங்களும், மேரிஸ் ஹில், தீட்டுக்கல், முள்ளிக்கொரை, ரோஜா பூங்கா செல்லும் சாலை, ஊட்டி கார்டன் மந்து ஆகிய பகுதிகளில் தலா ஒரு மரமும் விழுந்தன. ஊட்டி-குன்னூர் ரயில் பாதையில் பெர்ண் ஹில், கேத்தி மற்றும் லவ்டேல் பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. நுந்தளாவில் ராட்சத மரம் விழுந்து கோயில் மற்றும் சாலை சேதமடைந்தது.
அப்போது 300க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. அதன் பின்னர், தற்போதுதான் பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது. மின் கம்பங்களின் மீதும் மரங்கள் விழுந்ததால், நேற்று முன்தினம் இரவு முதல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு ஊட்டி நகரம் இருளில் மூழ்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் வீசிய பலத்த காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 19 இடங்களிலும், குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 15 இடங்களிலும், ஊட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 11 இடங்களிலும், குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 3 இடங்களிலும் மரங்கள் விழுந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பலத்த காற்று காரணமாக பல இடங்களில் வீடுகளின் கூரைகள் பெயர்ந்து விழுந்தன. காற்றின் வேகத்தால் ஊட்டி அருகில் உள்ள கோயில்மேடு கிராமமே உருக்குலைந்து காணப்படுகிறது. காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வீடுகளின் கூரைகள் பெயர்ந்தது. கூரை ஓடுகள் தரையில் கிடக்கின்றன. 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.