Sunday, September 29, 2024
Home » ஊட்டியில் நகராட்சி அலுவலர் வீட்டில் கைவரிசை திருடிய நகைகளை பங்கு பிரித்தபோது 2 கொள்ளையர்கள் சிக்கினர்

ஊட்டியில் நகராட்சி அலுவலர் வீட்டில் கைவரிசை திருடிய நகைகளை பங்கு பிரித்தபோது 2 கொள்ளையர்கள் சிக்கினர்

by Lakshmipathi
Published: Last Updated on

ஊட்டி : ஊட்டியில் திருடிய நகையை பங்கு பிரித்தபோது, 2 கொள்ளையர்கள் சிக்கினர். ஊட்டி மிஷனரி ஹில் பகுதியில் வசித்து வருபவர் திம்மையா. ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் வரி வசூலிப்பு அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த ஊரான கர்நாடக மாநிலத்திற்கு கடந்த 4 தினங்களுக்கு முன் குடும்பத்துடன் சென்றார். அப்போது வீட்டில் உள்ள பீரோவில் நான்கரை பவுன் தங்க நகைகளை வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை பக்கத்து வீட்டை சேர்ந்தவர் திம்மையாவை தொடர்பு கொண்டு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து திம்மையா நேற்று ஊட்டி வந்தார். வீட்டில் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதனையடுத்து ஊட்டி போலீசில் அவர் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கமர்சியல் சாலையில் உள்ள ஊட்டி நகர திமுக அலுவலம் முன்பு 2 பேர் நகைகளை பிரித்துக் கொண்டிருந்தனர்.

இதனை கண்ட நகர செயலாளர் ஜார்ஜ், கவுன்சிலர்கள் எல்க்ஹில் ரவி, தியாகு, மஞ்சுகுமார் மற்றும் கார்டன் கிருஷ்ணன் ஆகியோர் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனையிட்டபோது, ஏராளமான தங்க நகைகள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரும் ஊட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது அவர்கள் ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்த கண்ணன் (50), மோகன் (63) என்பது தெரியவந்தது. விசாரணையில் திம்மையா வீட்டில் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

fourteen − 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi