ஊட்டி- கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்: கலெக்டர்கள் அறிவிப்பு

ஊட்டி: ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறை நீதிமன்ற மறு உத்தரவு வரும் வரை தொடரும் என கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி கடந்த மே மாதம் முதல் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.

இந்நிலையில் நேற்றுடன் இ-பாஸ் முறை முடிந்த நிலையில், இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்திற்கு (ஊட்டி) இ-பாஸ் எடுத்து 13 லட்சத்து 12 ஆயிரத்து 800 சுற்றுலா பயணிகள் கடந்த 4 மாதங்களில் வந்துள்ளனர்.

தொடர்ந்து, ஐகோர்ட் மறு உத்தரவு வரும் வரை இந்த இ-பாஸ் முறை தொடரும்’’ என குறிப்பிட்டார். இதேபோல திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இ-பாஸ் அமலில் இருந்த 116 நாட்களில், கொடைக்கானல் நகருக்குள் வருவதற்கு 2,91,561 வாகனங்கள் பதிவு செய்து, 1,09,636 வாகனங்கள் மட்டுமே வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை சென்னை உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Related posts

வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹48 அதிகரிப்பு: தீபாவளி நேரத்தில் உயர்வால் வியாபாரிகள் அதிருப்தி

உபி கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றிய இந்து அமைப்பு

ரஷ்யா பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலி