ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம், சூளைமேனி மற்றும் ஆந்திர மாநிலம் தாசுகுப்பம், புதுகுப்பம் பகுதிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மாலை பள்ளிவிட்டதும் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது மாணவர்கள் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஊத்துக்கோட்டை போலீசார் விரைந்தனர். பஸ் நிலையத்தில் அடிதடியில் ஈடுபட்ட மாணவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாணவர்கள் மோதிக்கொண்டதை பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து அனுப்பினர். தற்போது இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.