தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வெள்ளாம்பரம்பூரை சேர்ந்தவர் புகழேந்தி(45). திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். கடந்த 13ம் தேதி ஆலக்குடியில் உள்ள ஒரு தோப்பில் எலி மருந்து சாப்பிட்டார்.
பின்னர் 3 நாட்கள் பணிக்கு சென்றார். இந்நிலையில் இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.
இதுபற்றி புகழேந்தியின் குடும்பத்தினர் கடன் பிரச்னை காரணமாகவே புகழேந்தி தற்கொலை செய்துகொண்டதாக நடுக்காவேரி போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகழேந்திக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்ததாகவும், இதில் ரூ.25 லட்சம் வரை இழந்து விட்டதாகவும், இதன் காரணமாகவே விரக்தியில் புகழேந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.