ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் ரூபாய் இழந்தார் ஜம்முவில் இருந்த ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: எட்டயபுரத்தில் வசிக்கும் தாயுடன் செல்போனில் பேசிக்கொண்டே உயிரை மாய்த்தார்

எட்டயபுரம்: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாயை இழந்த ராணுவ வீரர் தாயிடம் செல்போனில் பேசிக்கொண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த வேலு மகன் மணித்துரை (28). இவர் 2015 முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த நிலையில் மணித்துரை கடந்த 1ம் தேதி பாதுகாப்பு பணியில் இருந்தபோது திடீரென துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகளவு பணத்தை இழந்த காரணத்தால் மணித்துரை மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
மணித்துரை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கீழக்கரந்தையில் இருக்கும் தனது தாய் கனகவேலம்மாளை செல்போனில் அழைத்து பேசி உள்ளார். அப்போது ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தான் பணம் இழந்ததாகவும், இதற்காக பலரிடம் பணம் வாங்கி உள்ளதாகவும், ஊருக்கு வரவே விருப்பம் இல்லை, இனி நான் வாழ விரும்பவில்லை, இரண்டு துப்பாக்கி சப்தம் கேட்டதும் நான் இறந்து விட்டதாக நினைத்துக்கொள். அதுவரை என்னோடு பேசு அம்மா’ என்று கூறியுள்ளார்.

செல்போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது துப்பாக்கி சத்தம் இரண்டு முறை கேட்டதற்கு பிறகு மணித்துரை பேசவில்லை என்றதும் அவரது தாய் அதிர்ச்சியில் உறைந்து கதறி அழுதுள்ளார். தற்கொலை செய்து கொண்ட மணித்துரைக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தான் உதயசுருதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. ராணுவ வீரர் மணித்துரை உடல் நேற்று அவரது சொந்த ஊரான கீழக்கரந்தை கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கதறி அழுதனர். பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் அங்குள்ள சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

ராணுவ வீரர் மணித்துரை விடுமுறைக்காக கடந்த 1ம் தேதி சொந்த ஊருக்கு வர இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் உடல் தான் ஊருக்கு வந்து சேர்ந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மணித்துரையின் தந்தை வேலுச்சாமி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது மணித்துரையும் தற்கொலை செய்தது அந்த குடும்பத்தை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இரண்டு துப்பாக்கி சப்தம் கேட்டதும் நான் இறந்து விட்டதாக நினைத்துக்கொள். அதுவரை என்னோடு பேசு அம்மா.

Related posts

தமிழ்நாட்டில் இன்று, நாளை மற்றும் ஜூலை 15ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை முன் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விசாரணைக்கு ஆஜர்

இந்தியன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது: சீமான் பேட்டி