புதுடெல்லி: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இதையடுத்து அந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு,தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக ஆன்லைன் ரம்மி மற்றும் விளையாட்டு நிறுவனங்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ், சஞ்சய் குமார் மற்றும் எஸ்.வி.என்.பட்டி ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரரான ஆன்லைன் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி,‘‘தமிழ்நாடு அரசு ஆன் லைன் விளையாட்டுக்கு தடை செய்யும் விதமாக புதிய சட்டத்தை இயற்றி உள்ளது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,” இந்த விவகாரத்தில் இடைக்கால தடையோ அல்லது உத்தரவோ பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தெரிவித்து விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.