புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, சமூக ஊடகங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 30ம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகிறது. இதுகுறித்து தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் போது சூதாட்டம் மற்றும் சூதாட்டத் தளங்களின் நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களை விளம்பர இடைத்தரகர்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட சில ஊடக நிறுவனங்கள் அனுமதித்து வருகின்றன.
சூதாட்ட, பந்தய தளங்களின் விளம்பரங்கள் நுகர்வோருக்கு, குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு, நிதி மற்றும் சமூகப்பொருளாதார ஆபத்தை ஏற்படுத்துகின்றன. சூதாட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கும் பணமோசடி நெட்வொர்க்குகளுடன் தொடர்பு உள்ளது. இதனால் நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. இந்த விதியை மீறி செயல்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.