சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் (திமுக) பேசுகையில், ‘‘ ஜெயங்கொண்டத்தில் இயங்கி வருகின்ற சார்நிலை கருவூலத்திற்குப் புதிய கட்டிடம் கட்டப்படுமா?’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ‘‘அரசின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வது; மிகவும் இயல்பாக, எளிமையாக செய்வது தான் அரசினுடைய நோக்கம். ஆன்லைனின் நம்மால் எந்த அளவிற்கு எல்லா சேவையும் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு பல நன்மைகள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதனால், ஒவ்வோர் ஆண்டும் திட்டமிட்டு, எந்த அளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு எல்லா சேவையும் ஆன்லைனில் செய்து தர முயற்சி எடுத்து கொண்டிருக்கிறோம். எப்படி தகவல் உரிமைச் சட்டம் இருக்கிறதோ, அதைப்போல் சேவை உரிமைச் சட்டமும் கொண்டுவருவோம். இவற்றின்மூலம் அரசாங்கத்தின் எல்லா சேவைகளும் மக்களுக்கு எளிதாக கிடைக்கும்” என்றார்.