பாந்தாரா: மகாராஷ்டிரா மாநிலம், பந்தாராவில் ஆயுத தொழிற்சாலை இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையில் நேற்று காலை பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அப்போது பணியில் இருந்த 52 வயது ஊழியர் படுகாயமடைந்தார். தொழிற்சாலையில் இருந்து சத்தம் கேட்டதால் அருகில் உள்ள பிரிவு அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் அங்கு ஓடிவந்தனர். இதனை தொடர்ந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஊழியர் தொழிற்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த ஊழியர் அவினாஷ் மேஷ்ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. வெடிவிபத்து குறித்து விசாரணை செய்வதற்கு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வெடிவிபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.