தென்காசி: ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி, பூலித்தேவன் பிறந்தநாளை ஒட்டி தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் பச்சேரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதேபோல் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. தென்காசி தவிர பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு அமைப்பினர் மற்றும் ஏராளமான மக்கள், இரு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த வருகை புரிவர்.
இதனால் இந்நிகழ்ச்சிகளை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் கூடுவதால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க, இன்று மாலை முதல் ஆகஸ்ட் 21 வரை மற்றும் ஆகஸ்ட் 30 மாலை முதல் செப்டம்பர் 2 வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வாள், கத்தி, லத்தி, கற்கள் என்பன போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்கள் மற்றும் ஊர்வலங்கள், அன்னதானம், பொங்கலிடுதல், பால் குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலங்கள், அனைத்து வகையான வாடகை வாகனங்கள், சுற்றுலா மோட்டார் வண்டிகள், டூரிஸ்ட், மேக்சி வண்டிகள், அகில இந்திய டூரிஸ்ட் வண்டிகள் ஆகியவற்றுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்படும் பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.